அவனும் மனிதனே - ஒரு கிராமத்திலே ஒரு குடும்பம் (அத்தியாயாம் 01)

நாளும் ஓடி களைப்புற்றாலும் நின்று நிதானிக்க நினையாத
நிழல் உலகில்- நாளும்
காணுகின்ற நன்மை செய்த முகங்களை கூட
மறுபடி நினைக்க நேரமில்லாதவர் நாம்

ஆனாலும் வரலாற்றுத் தடங்களில்
கால் ஊன்றி தம்மை உறுதியாக்கியவர்களை
வெறுத்தாலும் கூட நினைவில் நிறுத்தி
நினைவு மையத்தில்
இடம் வழங்க மனது மறுப்பதில்லை

என் மூளைப் பதிவின் சிறு பகுதியை உறுத்துகின்ற
அடோல்ப் ஹிட்லரின் வாழ்க்கைத் தடங்களை இங்கு
தொடர்வதற்காக அவரை
வழங்கிய குடும்பத்தின் கதை இந்த அத்தியாயத்தில்...

1837ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ம் திகதி
ஆஸ்திரிய (Austria) நாட்டின் வால்ட்வியட்டல் (Waldviertel) என்கின்ற நகரத்தின்
ஸ்ட்ரோன்ஸ் (Strones) என்கிற கிராமத்தில்
ஒரு பெண்ணின் அழுகைக் குரல்
கூடவே ஒரு குழந்தையினதும்

ஒரு அழகான ஆண் குழந்தைக்கு உடலும் உயிரும்
வழங்கிய மரியா அன்னா சிக்கில்க்ரபர் (Maria Anna Schicklgruber)
சட்டபூர்வமற்ற குழந்தை என்ற அங்கீகாரத்தை
வழங்கியதால்தான் அதிகமாகவே அழுதார் போலும்

தன்னுள் உயிர்பெற்ற அவ்வுயிருக்கு
தன் தந்தையின் பெயர் இணைத்து
அலோய்ஸ் சிக்கில்க்ரபர் (Alois Schicklgruber)
என்று நாமம் வழங்க வேண்டிய கட்டாயம்
தாய் மரியாவுக்கு

பிரான்கன்பேகர் (Frankenberger) யூதக் குடும்பம்
மரியா சமையல் தொழில் செய்த இடம் என்பதும்
அங்கிருந்த 19 வயது மகன் உருவாக்கியவர் தான் அலோய்ஸ்
பிறப்பின் பின்பும் அக்குடும்பப் பணத்தை
அனுபவித்தவர் மரியா போன்ற
ஆதாரமற்ற கருத்துக்கள்
யோசிக்க வைப்பதும் உண்மை தான்

ஐந்து வயது தொடக்கத்தின் போதே தாய்
ஜொஹான் ஜோர்ஜ் ஹிட்லர் (Johann Georg Hiedler) என்பவரைக் கரம் பிடிக்க
ஜொஹான் நெபோமக் ஹிட்லர் (Johann Nepomuk Hiedler) என்கின்ற
தாயின் புதுக் கணவனின் தம்பியுடனான
பண்ணை வாழ்வுடன் தன்னை இணைத்தவர் அலோய்ஸ்
தற்காலிகமான அவ்வாழ்வு
அவருக்கு நிரந்தராமானது
தாயின் இறப்புச் செய்தி கேட்ட பின்னால் தான்

திருப்தி என்பதை எதிலுமே காணாமல்
தேடலிலே ஈடுபடுகின்ற மனிதர்கள்
தொடர்ந்தும் தன்னுள் விருட்சத்தைக்
கண்டு கொண்டுதான் இருப்பர்
நல்லதொரு உதாரணம் அலோய்ஸ்

பண்ணை வாழ்வு பிடிபடாமல்
நகரத்து வாழ்வு நோக்கி நகர்ந்து
சப்பாத்து தொழிலாளியாக
பிழைப்பு நடாத்தத் தொடங்கிய போது
அலோய்ஸ்க்கு 13 வயது

தொடர்ச்சியான விடா முயற்சி
அவருக்களித்த பரிசு
ஆஸ்திரிய சுங்க இலாகாவில் மேற்பார்வையாளர் பதவி.
முடிவுறாத முயற்சி மீண்டும் வழங்கியது
1875இல் அதிஉயர் துணை கண்காணிப்பாளர் பதவி உயர்வு

இறப்பு வரையிலும் தந்தை யாரென அறியாத
சட்டபூர்வமற்ற பிறப்பை எங்கும் சொல்ல தயங்காத
அலோய்ஸ் சிக்கில்க்ரபரை
சிறிய தந்தையின் வேண்டு கோள்கள்தான் மாற்றியது
'அலோய்ஸ் ஹிட்லர்' (Alois Hitler) என்று
அதுவும் 39 வயதிலே

'அலோய்ஸ் ஹிட்லர்' (Alois Hitler)

திருமண வாழ்வில் அலோய்ஸ் நுழைந்தது
36 வயதில் அன்னா க்ளாஸ்ல் ஹோரர் (Anna Glasl-Horer) என்பவருடன்
தொடங்கியது 1873இல்
விவாகரத்தில் முடிவுற்றது 1880 இல்

மறுபடி தொடங்கியது 1883 இல்
பிரான்ஸிஸ்கா மாட்ஸெல்ஸ்பேர்கர் (Franziska Matzelsberger) என்பவருடன்
ஆண் என்றும் பெண் என்றும் இரு தோன்றல்கள்
அலோய்ஸ் ஹிட்லர் ஜூனியர் (Alois Hitler, Jr.)
மற்றும் ஏன்ஜலா ஹிட்லர் (Angela Hitler)
இவருடனான உறவில்தான்
அலோய்ஸ்க்கு கிடைத்தது

1884 இலே பிரான்ஸிஸ்கா மறைவில்
அலோய்ஸ் மூன்றாவது திருமணத்தை நாடினார்
உலகை ஆட்டிய பிறப்பினை
உருவாக்கியதும் இத்திருமணம்தான்

அன்புடன் சஜீ
20-12-2012

அவனும் மனிதனே - நூற்றாண்டு தாண்டியும் முடிவுறாத வெறுப்பு

தினம் தினம் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அயலவரைக் கூட அறிய முடியாதவர்களாகிறோம். ஆனாலும் உலகம் சொல்லுகின்ற பெயர்களையும் அவர்களின் சரிதங்களையும் கற்பதிலும் விமர்சிப்பதிலும் என்றுமே எம்மவர்க்கு தனிப் பிரியம் இருப்பது என்னவோ மறுக்க முடியாத உண்மை. இந்ந வகையில் எம் மனதில் நாம் வீரர்களென கருதுபவர்கள் பற்றியோ அல்லது நானும் மனித இனம் என்று சொல்வதற்கு கூச்சப்பட செய்பவர்கள் பற்றியோ தேடிப்படிப்பது சுவாரஸ்யமிக்கது. விரும்பினால் மானசீகமாக அவர்களை தங்கள் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வதற்கோ அல்லது வெறுத்து ஒதுக்கி விமர்சிப்பதற்கோ, ஆழச் சென்று அவர்களுடைய முற்பட்ட வாழ்ககையைக் கிளறி ஆராய்வது முக்கியமே.

இதற்காக உலகம் உச்சரிக்கின்ற அநேகமான பெயர்களில் ஓரளவு தனி இடத்தை வகிப்பது 'அடோல்ப் ஹிட்லர்' என்பதை மனது விரும்பியோ விரும்பாமலோ ஏற்க வேண்டித்தான் இருக்கின்றது. கடந்த நூற்றாண்டின் கசப்பு நிறைந்த காலப்பகுதியென அடையாளப்படுத்தக் கூடிய அருவறுப்புப் பகுதி ஹிட்லரின் காலம்தான். வெறும் 56 ஆண்டுகள் பூமியில் சஞ்சரித்த அவருக்கு, முதல் 30 ஆண்டுகள் அவருக்கே அடையாளம் தெரியாது. தன்னுள்ளே கிடந்த சக்தியை திரட்டி எடுத்து பின் வந்த 26 ஆண்டுகள்தான் உலகமே சற்று மூச்சையுற்று, இவன் மனித இனத்துள் அடக்கமா? என்று சந்தேகித்து திரும்பிப் பார்த்து நின்ற காலம். ஹிட்லரின் வாழ்க்கை ஏராளமான எழுத்தாளர்களால் எத்தனையோ மொழிகளில் எழுதிக்குவிக்கப்பட்டது. இந்த பகுதியும் சற்று வித்தியாசமாய், வாசிப்பவரை நின்று நிறுத்தி தொடர்ந்து சுவாரஸ்யமாக ஹிட்லரின் வாழ்க்கையின் உண்மைக் சம்பவங்களை அறிந்து கொள்ளுவதற்காக தொடர்ந்தும் எழுதப்படப்போகிறது.

அன்புடன் சஜீ
12-12-2012

“Billa-II”- எனது வித்தியாசமான முயற்சி

அறக்கப் பறக்க
ஆட்டோ பிடித்து
இருட்டிய தியேட்டர்க்குள்
தடுமாறி நடந்து
தட்டுப்பட்ட இருக்கையில் அமர்ந்து
தலயின் Billa-II வில் ஐக்கியமானேன்

ஆரம்பம் ஆர்ப்பாட்டமின்றி
அமைதியாய் அகதி முகாமில்
அவதியான வாழ்க்கையுடன் தொடங்க
‘அகதிகள் தான், ஆனால் அனாதைகள் இல்லை’
அழுத்தமான வசனம் நெஞ்சைத் தொட்டது

ஆரம்பத்திலே அதட்டும் அதிகாரியை
அலட்டாமல் உயிர் வாங்கும் காட்சி
அற்புதம்

‘உட்கார்ந்து வேல வாங்கிறவனுக்கும்
உசிரக் குடுத்து வேல செய்றவனுக்கும்
வித்தியாசம் இருக்கு’
அடிக்கடி சொல்லும் இவ்வசனமும்
அபாரம்

‘சொன்ன நேரத்துக்கு முன்னே போனா வேற வேல இல்லாதவன்னு நெனச்சுடுவாங்க
லேட்டா போனா பொறுப்பில்லாதவன்னு சொல்லுவாங்க,
சொன்ன நேரத்துக்கு போனாத் தான் நம்ம மேல நம்பிக்க வரும்’
நேரத்துக்குச் சொல்லும்
நேர்த்தியான வசனம்

‘நல்லவங்களக் கண்டுபிடிக்கிறது
ரொம்பக் கஷ;டம்’
உண்மையான வசனம்- சற்று
உறுத்துவதும் கூட

‘இதுவரைக் காட்டிக் குடுத்தவங்க எல்லாம்
கூட இருந்தவங்கதான் சரித்திரத்தைப் புரட்டிப் பாரு
சான்றுகள் இங்கும் நிறைய உண்டு
சாட்டையடியான வசனம்

‘ஆசையில்லை: பசி’
ஆணிவேர் வசனம்
ஆக்கிரமித்தது திரைக்கதையை
அத்தனை அர்த்தமும் இதுதான்

அத்தனை வில்லன்களும் ஒரே உலகில்
அனைவரையும் சமாளிக்கிறார்
அவருக்கு எதுவுமே நிகழ்வதில்லை

தடார் இங்கே ஒருத்தன் விழ
டுமீல் அங்கே உயிர் விழுகிறது
சகிக்க முடியவில்லை
உயிருக்கு இந்த அளவிற்கா மதிப்பில்லை

அழகிய அஜித்துக்கு
அவ்வளவுக்கு கதாநாயகி
அற்பமா திரையுலகில்

என் அனுபவத்தில் சொல்கிறேன்
என்னதான் இருந்தாலும்
உன்னைப் போல் ஒருவன் போலல்ல
சக்ரி டோலேட்டி அவர்களே
சற்று சறுக்கலாய்த்தான் இருக்கும்

வசனத்திற்கு மார்க் வழங்கலாம்
இரா முருகன் இன்னும்
நீண்ட காலம் நிலைத்து நிற்பார்

இசை ஆக்கிரமத்தது
இதமாயும் இருந்தது
யுவனுக்கு நிச்சயமாய்
புது வரவுகள் உண்டு

என் ஆசை ரசிகன் அருகிலிருந்தும்
ரகசியமாய் ரசித்தேன் ‘தல’ யை

அற்புதமான நடிப்பு
அழகான நடை
அள்ளுகிறார் நெஞ்சை
‘தல’ என்றுமே ‘தல’ தான்

- For the request of my partner

நிமிர்ந்த நெஞ்சம்

நினைப்பில் வலி
நெஞ்சை இறுக்கும் நிகழ்ச்சி
யாருமற்ற மழலை வீலிடும் சத்தம்
எட்டிப்பார்த்து
கிட்டச் சென்று
தலை தடாவி
நெற்றி முத்தம் தந்து
திரும்ப நடக்கையில்
கை தூக்கி என்
விரல் பிடிக்கையில்
துடிக்கின்ற இதயம்
முதல்முறை 
சந்தோசத் துவளலில்
துள்ளித்தான் திரிந்தது

தவம்

ஒரு கை மார் தொட
மற்றையது மெத்தையில் நீளும்
பாதி உடல் கீழே சரிய
மீதி உடம்பில் ஒட்டும்
ஒற்றைக் கால் மடக்கி 
கால் மீது தவளும்
அடுத்த கால் நீட்டி 
மற்றைக் கால் பின்னும்
சுவாச ஓசை பிறை நுதல் கொள்ள
இரு விரல் கொண்டு கேசம் தடவும்
இதய ஓசை காதினுள் செல்ல
கனவு நிலையிலும்
நிம்மதி காணும்

ஆனந்தம் கொள்கிறேன்...

தாவித் தாவி ஓடி- பின்
தன் வழியே திரும்பும்
தங்க நிறம் அவை

சிறியவர் உண்டு
பெரிதாய் ஏப்பம் விட
மெதுவாய் நீந்தும்
பொருந்திய இரையை
பொசுக்கென கவ்வும்
கறுப்பு நிறம் அவை

அசைய முடியாத- ஆயினும்
ஆணவம் அவற்றுக்கு
சுவாசம் வழங்கி- தானும்
சுவாசம் கொள்வதாய்

விசேடமாய் ஒன்று
வீதிக்கடையெல்லாம் தேடி
விரைவில் கிடைக்கவில்லை
விருதாக நண்பன் கொடுத்தான்
விரவிய சந்தோசத்தில்
விழுந்து அடித்து ஓடி
விட்டு விட்டேன்
கழிவுகள் அனைத்தும்
கண்ட வயிறு கொண்டது
களிப்பாய்த்தான் கிடக்குது

வழிப்பயணம் முடித்து
வீடு திரும்பிய வழியில்
வடிவாய் சில வண்ண
சுழியோடிகள் கண்டேன்
பிளாத்திக்குத் தான்
பரவாயில்லை பார்க்க அழகு
பையினுள் போட்டேன் பின் வந்து
பொருத்தி மின்னும் வழங்கினேன்

அடிக்கடி கழுவி- என்னை
ஆசுவாசப்படுத்துவது பெரும்பாடு
ஆராத்துயர் கொண்டு
ஆழ்கையில் - நான்
ஆனந்தம் பெறுவது- என்
அழகு மீன் தொட்டியில்தான்

அத்தனையும் ஒரு நாளில்…

விஞ்ஞானத்தில் சொல்லிக் கொடுத்தார்கள்
விந்தைகள் கொண்ட கரு உருவாக்கத்தை
விந்துகள் செலுத்தப்படுவது ஆணிலிருந்தாம்
விரைந்தவை கருவாவது பெண்ணிலிருந்தாம்

அவ்வுருக் கொடுத்த ஆண்தான் அப்பாவாம்
அவை பெற்று எமை உருவாக்கி
அவளுயிர் ஈந்து கருவாக்கி
அகிலத்தைக் காட்டுபவள் அம்மாவாம்

அப்பா இருந்திருக்க வேண்டும்
அவரால் தான் கருவாக்கப்பட்டிருப்போம்
அன்னையும் இருந்திருப்பாள்
அதனால்தான் உயிர்த்திருக்கிறோம்

நாட்களும் நகர்கின்ற போது
நாண்டுவிடுகின்றனர் மனிதர்கள்
நகர்ந்த நாட்களினூடே
நாடியடங்கியவர்களின் பிள்ளைகள் நாங்கள்

ஆயுள் முடிந்து போயினர் பெற்றோர்
அதற்காக நாங்கள் அநாதையில்லை
ஆண்டுகள் கடக்கின்ற போது
ஆயுட்கள் ஒவ்வொன்றும் முடிந்துதான் போகும்
அத்தனை உயிரும் -ஒரு நாளில்
அநாதையாய்த்தான் ஆகும்

உங்கள் ஞாபகத்துடன்…

பல்கலைக் கழக இறுதி நாளில் என் தோழியர் சங்மத்தில் என் வீடு முத்தையா விடுதியில் என்னால் பகிரப்பட்டது.. என்றும் உங்கள் ஞாபகத்துடன் நான் இங்கு..
என் பிரிய தோழிக்கு,
உன் பிரிய தோழியிடமிருந்து,
வரையப்பட்ட இம் மடல்
உன்னால் உணரப்படுகின்ற போது – நான்
உன்னுடனான பொழுதுகளை முடித்துக் கொள்வதற்கான
நிமிடத்துடன்
இன்னும் சில நிமிடங்களில்…
இன்னும் சில விநாடிகளில்…
பயணித்துக் கொண்டிருப்பேன்
சந்தோசித்த – எம் காலங்கள்
சிறகடித்த – எம் நினைவுகள்
சில கணங்களில்,
சிதறுண்டு போன – எம்
சிறு துளி அழுகைகளும்
சேருமிடம் இன்றுதான்…
நீண்ட – எம்
வருடங்கள்
வாழ்ந்த காலங்களில்
நான்கில் மூன்று பங்கினை
கூடிக்குலவி
கும்மாளமிட்டுச் சிரித்து
குதூகலமாய்த்தான்
உன்னுடன்
உறவாடிக் கழித்திருக்கின்றேன்…
என் ஒற்றைச் சிறகு கொண்டு
நான் பறக்கத் துடித்த
தருணங்களில் – உன்
மற்றைய சிறகு கொண்டு
சோடிச் சிறகுகளால் – நாம் பறந்து
வான் தொட்ட காலங்கள்
உனக்கு நினைவிருக்கின்றதா?
பறந்து திரிந்து – எம் சிறகுகள்
ஓய்வு தேடி ஏங்குகின்ற போது
வேடந்தாங்கலாய் – எமைத்
தத்தெடுத்த மண்
இந்த முத்தையா மண் தான்
எத்தனையோ நிமிடங்கள் – இந்த
பாத்ரூம் குழிகளிலும்,
அங்காங்கே – எமக்காய்
பரவவிட்டு – மரம் கூட வேர் விட்டு,
நாம் கதைகள் பேசிச்
சிரிக்க இடமளித்த – இவ்
வேர்த் தண்டுகளிலும் ¬– எம்
பாசங்கள் பரிமாறப்பட்ட நிமிடங்கள்
உனக்கு என்றேனும் மறக்குமா?
உன் காதல் நேரங்களில்
களிப்புற்றக் கிடந்தவை
காயப்பட்டுத் தோற்றுப் போனவை – எல்லாமே
என் காதோரம் சொல்லி
என் மடி நனைத்த கதை
என்றாவது நினைவில் கொள்வாயா?
சோறூட்டுவதற்கு – நீ
உன் விரலை
என் வாய்க்குள் திணிப்பதும்,
நான் உன் விரல் கடிப்பதும்…
கடிபட்ட காயம் ஆறு முன்னே
மருந்தாக – நாம்
கூடி நகைத்ததும்
உன் நெஞ்சுக் கூண்டில் – என்றைக்கும்
நிலைத்திருக்குமா?
பரீட்சைகள் – எமக்குப்
பழகிப் போனவை…
படிக்கும் நேரங்களில் – எம்
பல்லிளிப்புகளும்
பல கோடி நினைவுகளும்
பலரது கதைப் பேச்சுகளும்
புதியனவாகவே என்றும்
பிறக்கின்றனவே…
பழகிய உன்னால் – என்றாவது
மீட்டிப் பார்க்கப்படுமா?
புகைப்படங்களில் தேடப்படப் போகின்ற – என் முகமும்
ஓட்டோக்ராபில் எழுதப்பட்ட – என் வாசகமும்
எதிர்காலத்திலும்
எனக்கு இடமளிக்குமா?
மாறப் போகின்ற
நினைவலைகள் – உன்னால்
மறக்கடிக்கப் போகும் – என்
ஞாபகங்கள் – என்றைக்காவது
மீட்டப்படும் – அந் நேரம்
துளிக் கண்ணீர் விடு…
எமக்காய்…
எம் நட்புக்காய்…
எம் அன்புக்காய்…
உன் ஒற்றை விழிக் கண்ணீர்த்துளி
உலகைப் பார்க்கப் புறப்படும் போது – அதன்
பயணத்தை முடிக்கச் செய்யும்
ஒற்றை விரல்
எனதாக இருக்கும்…
இல்லையேல்,
கூடப் பயணிக்கும்
மற்றைய விழிக் கண்ணீர்த் துளி
எனதாக இருக்கும்…
அடி மனத்து விளிம்புகளில் இருந்து
உன் பிரிய தோழி,
பாத்திமா இன்ஸாப் ஏ.எம்.

மரணிக்கும் வேளையிலும்…

ஒய்யாரமாய் இதழ் விரித்துஒயிலாய்த் தான் குரல் எழுப்பிஒட்டி ஒட்டியே உடன் வந்தேன்ஒரு நாள் ஆம் என்றாள்
கூடல் வேண்டு மென்றாள்
குறிப்பெடுத்து நாள் பார்த்து
குறித்த நாள் இன்றுதான்
குதூகலம்தான் எனக்கு
மணவாளன் எனைக் காண
மல்லாக்கக் கிடந்தாள்
மணம் வீசி அழைத்து
மையலுடன் எனைத் தழுவினாள்
மயங்கிக் கிடந்தேன் நான்
மதுவுண்டு கழித்து
மகரந்தச் சேர்க்கையில்- என்
முழு உடலும் வியர்த்து
ஆ… என்ன சுகம்
ஆனந்தம் அடக்கி வைத்து- எனை
அடைக்கலம் புகச் செய்த
ஆரணங்கு என்னவள்
ஆராதிப்பேனடி உனை
ஆயுட்காலம் முழுவதும்
ஆ.. ஆ… அலறித் துடித்தாள்
ஆத்திரத்துடன் திரும்பினேன்
ஆரவரமாய்த்தான் பறித்து
ஆனந்தமாகவே பகிர்கின்றான்
அறிவிலா ஆடவன்- தன்
ஆருயிர் காதலிக்கு
ஆவேசமாய்க் கொட்டினேன்
அவன் காதலிக்கு
ஆணவமாய் கசக்கி
அப்பால் வீசினான்
மரணிக்கும் வேளையிலும்
மிடுக்குடன் சொல்கிறேன்
முட்டாள் மனிதனே- உன்
மனதுக்கு தெரியப்படுத்து
மற்றவர் வலி உணரப் பயிற்சி கொடு- தான்
மட்டுமே வாழும் மந்த புத்தியை மறந்துவிடு

வரலாறு படைக்கின்றோம்

வற்றிப்போன மகிழ்ச்சிகளுடனும்வலித்துக் கொண்டேயிருக்கும் மனத்துடனும்வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மில்வரலாறு படைக்கவழி தேடுகிறீர்கள்வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்படுவது நிச்சயம் உங்களுக்கு
ஈழத்தமிழர் என- எம்மை
ஈட்டியெடுத்து குத்திய நாட்கள் மறந்து- பல்
இளித்துக் கொண்டே வருகின்றீர்கள்
இனி சமாதானம், சுகஜீவனம்
இன்பமயமான வாழ்க்கை என்று
எம்மில் பலருக்கு இன்னும்
எம் சொந்த இடம் எதுவெனப் தெரியாது
பாதிநாட்களை நாம் கழித்தது
பங்கரிலும், முகாமிலும் தான்- மற்றைய
பாதிக்கு பயப்படத் தேவையில்லை- எம்
பாழடைந்த வீடுகளும் தோட்டங்களும்
பழையபடி எமக்கு கிடைக்கும் உறுதி
பதிவுத் திட்டம் இன்னும்- எம்
படிகளுக்குத் தான் வரவில்லை
சிசுவாகப் பிறந்த -எம்
சிறுசுகள் முதல் கேட்ட ஓசை
‘செல் அடிக்கிறான்கள் அந்தா ஓடுங்கோ’
செல்லமாக எமை ‘அம்மா’ என அழைக்க
சொல்லிக் கொடுக்க எமக்கு
சிந்தனை ஓடவில்லை
சிந்திக்க தாமதித்தால்
சிசுவும் இல்லை- எங்கள்
சிரசும் இல்லை- இப்போது
சிரித்துக் கொண்டே சொல்கிறோம்- வளர்ந்த
சிறுசுகளுக்கு ‘அம்மா’
சொல்லிக் கொடுக்க
சிறந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
பள்ளிக் காலத்தில்
பழம் பொறுக்கிப்
பரிசு வாங்கி –எம்
பயல்களுக்கு ஞாபகமில்லை
பங்கர் பதுங்கலுக்கு
பரிசு வழங்கப்படவுமில்லை-
பதுங்கிய பங்கர்களுக்கும்
பொறுக்காத பழங்களுக்கும் சேர்த்து –ஒரு
பதுங்கிப் பழம் பொறுக்கலுக்கு புதிதாய்
போட்டித் திட்டம் பரவலாக்கப்பட வேண்டும்
அபிவிருத்தி என்றும் அரச நலத் திட்டம் என்றும்
அநேகம் பேர் அலைந்து திரிகின்றார்கள்
ஆயுள் முடிந்தது தெரியாமல்
அந்திரேட்டிக் கிரியை முடித்த
அன்னையர்களுக்கு
ஆயிரம் அம்மாக்கள் அஞ்சலித் திட்டம்- என்று
அனுதாபத் திட்டம் ஆரம்பித்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

தேடித் தோற்றிருக்கின்றேன்

முதலாம் வயதில் என் கை பிடித்து
நடை பழக்கினீர்களாம்
அயலவர்கள் சொன்னார்கள்
அடிக்கடி நான் அசுத்தம் பண்ணிய
ஆடைகளை நீங்களே துவைப்பீர்களாம்
அம்மா சொன்னார்கள்
என் பள்ளிக் கூட அனுமதிச் சீட்டுக்காக
ஆயிரம் தடவைக்கு மேல் அலைந்திருப்பீர்களாம்
ஆசிரியர்கள் அத்தனைபேரும் சொன்னார்கள்

நினைவிருக்கிறதா உங்களுக்கு?
என் நான்கு வயதில்
எனக்கு நிலா வேண்டும் என்று கேட்ட போது
கண்ணாடியில் என்னைக் காட்டி இதோ நிலா இருக்கிறது
என்று சொன்னவர் நீங்கள் தான்
யானை பார்க்கணும் என்ற போது
என்னருகே அமர்ந்து
யானை மேல் ஏற்றிச் சென்றவரும் நீங்கள்தான்
வரும்வழியிலே ஆறு கடக்க
உங்கள் தோள்மேல் ஏற்றி
என்னை கரை சேர்த்தவரும் நீங்கள் தான்

ஞாபகம் இருக்கிறது எனக்கு
ஆண்டுகள் ஒன்றிரண்டு சென்றிருக்கும்
எனக்கும் ஏழு வயது தொடங்கியிருக்கும்- அப்போதும்
உம் கைக்குள் பிணைக்கப்பட்டிருந்த
என் விரலை பிரித்தெடுத்து
எங்கோ தூரத்தே சென்றீர்கள்
விளங்கவில்லை எனக்கு- நீங்கள் செல்வது
வெகு தூரம் என்று
நீங்கள் சென்ற தூரங்கள் தான் என்னுள்
தேடல்களையும் துவக்கி விட்டன

பள்ளிக்கூட பரிசு வாங்கும் நாட்களில்
உம்மை நான் தேடிய நாட்கள் அதிகம்
நண்பர்கள் கூட்டம் 'அப்பா எங்கே' எனும்போது
என் விழிக் கண்ணீர் தேடியதும் உம்மைத்தான்
வயதுக்கு வந்து நான் முதன்முதலாய்
வெட்கப்படுகையில் -என்
ஞாபகங்கள் தேடியதும் உம்மைத்தான்
அநேக நேரங்களில் கும்மிருட்டில் -நான்
கால் குத்தி உட்கார்ந்து -என் 
அழுகைகள் அத்தனையும் உங்களுக்காகத்தான்

தேவைகள் என்றுமே முடியாதனவாம் 
பொருளியலில் யாரோ அறிஞர் சொல்லி 
கேள்விப்பட்டிருக்கிறேன்
அவருக்கு தங்தை இருந்திருப்பார் போல
இல்லாவிட்டால் எழுதியிருப்பார்
தேடல்கள் முடிவே அற்றன என்று

இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்- ஆனால்
என் தேடல்கள் முற்றுப் பெறும் போது
உஙகள் வயது வற்றிப் போயிருக்கும்
அடையாளம் தெரியாத என்னை நீங்கள்
ஆள விசாரிக்கும் போது- நான்
அப்பா என்று சத்தியமாய்
அழைக்க மாட்டேன்
தேடல்கள் முடிவுற்ற திருப்தியில்
திரும்பி நடந்து சென்று கொண்டேயிருப்பேன்- என் அம்மா
எனக்காக காத்துக் கொண்டு நிற்பார்- தூரத்தே
கண்டாலும் கை நீட்டுவார் -எனை அணைக்க