மரணிக்கும் வேளையிலும்…

ஒய்யாரமாய் இதழ் விரித்துஒயிலாய்த் தான் குரல் எழுப்பிஒட்டி ஒட்டியே உடன் வந்தேன்ஒரு நாள் ஆம் என்றாள்
கூடல் வேண்டு மென்றாள்
குறிப்பெடுத்து நாள் பார்த்து
குறித்த நாள் இன்றுதான்
குதூகலம்தான் எனக்கு
மணவாளன் எனைக் காண
மல்லாக்கக் கிடந்தாள்
மணம் வீசி அழைத்து
மையலுடன் எனைத் தழுவினாள்
மயங்கிக் கிடந்தேன் நான்
மதுவுண்டு கழித்து
மகரந்தச் சேர்க்கையில்- என்
முழு உடலும் வியர்த்து
ஆ… என்ன சுகம்
ஆனந்தம் அடக்கி வைத்து- எனை
அடைக்கலம் புகச் செய்த
ஆரணங்கு என்னவள்
ஆராதிப்பேனடி உனை
ஆயுட்காலம் முழுவதும்
ஆ.. ஆ… அலறித் துடித்தாள்
ஆத்திரத்துடன் திரும்பினேன்
ஆரவரமாய்த்தான் பறித்து
ஆனந்தமாகவே பகிர்கின்றான்
அறிவிலா ஆடவன்- தன்
ஆருயிர் காதலிக்கு
ஆவேசமாய்க் கொட்டினேன்
அவன் காதலிக்கு
ஆணவமாய் கசக்கி
அப்பால் வீசினான்
மரணிக்கும் வேளையிலும்
மிடுக்குடன் சொல்கிறேன்
முட்டாள் மனிதனே- உன்
மனதுக்கு தெரியப்படுத்து
மற்றவர் வலி உணரப் பயிற்சி கொடு- தான்
மட்டுமே வாழும் மந்த புத்தியை மறந்துவிடு

வரலாறு படைக்கின்றோம்

வற்றிப்போன மகிழ்ச்சிகளுடனும்வலித்துக் கொண்டேயிருக்கும் மனத்துடனும்வாழ்ந்து கொண்டிருக்கும் எம்மில்வரலாறு படைக்கவழி தேடுகிறீர்கள்வாழ்நாள் சாதனையாளர் விருதுவழங்கப்படுவது நிச்சயம் உங்களுக்கு
ஈழத்தமிழர் என- எம்மை
ஈட்டியெடுத்து குத்திய நாட்கள் மறந்து- பல்
இளித்துக் கொண்டே வருகின்றீர்கள்
இனி சமாதானம், சுகஜீவனம்
இன்பமயமான வாழ்க்கை என்று
எம்மில் பலருக்கு இன்னும்
எம் சொந்த இடம் எதுவெனப் தெரியாது
பாதிநாட்களை நாம் கழித்தது
பங்கரிலும், முகாமிலும் தான்- மற்றைய
பாதிக்கு பயப்படத் தேவையில்லை- எம்
பாழடைந்த வீடுகளும் தோட்டங்களும்
பழையபடி எமக்கு கிடைக்கும் உறுதி
பதிவுத் திட்டம் இன்னும்- எம்
படிகளுக்குத் தான் வரவில்லை
சிசுவாகப் பிறந்த -எம்
சிறுசுகள் முதல் கேட்ட ஓசை
‘செல் அடிக்கிறான்கள் அந்தா ஓடுங்கோ’
செல்லமாக எமை ‘அம்மா’ என அழைக்க
சொல்லிக் கொடுக்க எமக்கு
சிந்தனை ஓடவில்லை
சிந்திக்க தாமதித்தால்
சிசுவும் இல்லை- எங்கள்
சிரசும் இல்லை- இப்போது
சிரித்துக் கொண்டே சொல்கிறோம்- வளர்ந்த
சிறுசுகளுக்கு ‘அம்மா’
சொல்லிக் கொடுக்க
சிறந்த திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்
பள்ளிக் காலத்தில்
பழம் பொறுக்கிப்
பரிசு வாங்கி –எம்
பயல்களுக்கு ஞாபகமில்லை
பங்கர் பதுங்கலுக்கு
பரிசு வழங்கப்படவுமில்லை-
பதுங்கிய பங்கர்களுக்கும்
பொறுக்காத பழங்களுக்கும் சேர்த்து –ஒரு
பதுங்கிப் பழம் பொறுக்கலுக்கு புதிதாய்
போட்டித் திட்டம் பரவலாக்கப்பட வேண்டும்
அபிவிருத்தி என்றும் அரச நலத் திட்டம் என்றும்
அநேகம் பேர் அலைந்து திரிகின்றார்கள்
ஆயுள் முடிந்தது தெரியாமல்
அந்திரேட்டிக் கிரியை முடித்த
அன்னையர்களுக்கு
ஆயிரம் அம்மாக்கள் அஞ்சலித் திட்டம்- என்று
அனுதாபத் திட்டம் ஆரம்பித்தாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை

தேடித் தோற்றிருக்கின்றேன்

முதலாம் வயதில் என் கை பிடித்து
நடை பழக்கினீர்களாம்
அயலவர்கள் சொன்னார்கள்
அடிக்கடி நான் அசுத்தம் பண்ணிய
ஆடைகளை நீங்களே துவைப்பீர்களாம்
அம்மா சொன்னார்கள்
என் பள்ளிக் கூட அனுமதிச் சீட்டுக்காக
ஆயிரம் தடவைக்கு மேல் அலைந்திருப்பீர்களாம்
ஆசிரியர்கள் அத்தனைபேரும் சொன்னார்கள்

நினைவிருக்கிறதா உங்களுக்கு?
என் நான்கு வயதில்
எனக்கு நிலா வேண்டும் என்று கேட்ட போது
கண்ணாடியில் என்னைக் காட்டி இதோ நிலா இருக்கிறது
என்று சொன்னவர் நீங்கள் தான்
யானை பார்க்கணும் என்ற போது
என்னருகே அமர்ந்து
யானை மேல் ஏற்றிச் சென்றவரும் நீங்கள்தான்
வரும்வழியிலே ஆறு கடக்க
உங்கள் தோள்மேல் ஏற்றி
என்னை கரை சேர்த்தவரும் நீங்கள் தான்

ஞாபகம் இருக்கிறது எனக்கு
ஆண்டுகள் ஒன்றிரண்டு சென்றிருக்கும்
எனக்கும் ஏழு வயது தொடங்கியிருக்கும்- அப்போதும்
உம் கைக்குள் பிணைக்கப்பட்டிருந்த
என் விரலை பிரித்தெடுத்து
எங்கோ தூரத்தே சென்றீர்கள்
விளங்கவில்லை எனக்கு- நீங்கள் செல்வது
வெகு தூரம் என்று
நீங்கள் சென்ற தூரங்கள் தான் என்னுள்
தேடல்களையும் துவக்கி விட்டன

பள்ளிக்கூட பரிசு வாங்கும் நாட்களில்
உம்மை நான் தேடிய நாட்கள் அதிகம்
நண்பர்கள் கூட்டம் 'அப்பா எங்கே' எனும்போது
என் விழிக் கண்ணீர் தேடியதும் உம்மைத்தான்
வயதுக்கு வந்து நான் முதன்முதலாய்
வெட்கப்படுகையில் -என்
ஞாபகங்கள் தேடியதும் உம்மைத்தான்
அநேக நேரங்களில் கும்மிருட்டில் -நான்
கால் குத்தி உட்கார்ந்து -என் 
அழுகைகள் அத்தனையும் உங்களுக்காகத்தான்

தேவைகள் என்றுமே முடியாதனவாம் 
பொருளியலில் யாரோ அறிஞர் சொல்லி 
கேள்விப்பட்டிருக்கிறேன்
அவருக்கு தங்தை இருந்திருப்பார் போல
இல்லாவிட்டால் எழுதியிருப்பார்
தேடல்கள் முடிவே அற்றன என்று

இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்- ஆனால்
என் தேடல்கள் முற்றுப் பெறும் போது
உஙகள் வயது வற்றிப் போயிருக்கும்
அடையாளம் தெரியாத என்னை நீங்கள்
ஆள விசாரிக்கும் போது- நான்
அப்பா என்று சத்தியமாய்
அழைக்க மாட்டேன்
தேடல்கள் முடிவுற்ற திருப்தியில்
திரும்பி நடந்து சென்று கொண்டேயிருப்பேன்- என் அம்மா
எனக்காக காத்துக் கொண்டு நிற்பார்- தூரத்தே
கண்டாலும் கை நீட்டுவார் -எனை அணைக்க